தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், 4-வது மாநில அளவில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான குடியரசு தின விழா குழு விளையாட்டு போட்டிகள் தேனியில் நடந்தது. 40 அணிகள் பங்கேற்ற அந்த போட்டியில், நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப்பள்ளி கபடி அணி வீரர்கள் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். இதனையடுத்து சாதனை படைத்த கபடி அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நெய்க்காரப்பட்டியில் நடந்தது. முன்னதாக மேளதாளம் முழங்க கபடி வீரர்களை டிராக்டரில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். பின்னர் பள்ளி செயலர் ராஜ்குமார், மேலாண்மை குழு உறுப்பினர் ராஜாகவுதம் ஆகியோர் தலைமையில் வீரர்களுக்கு மாலை அணிவித்து பாராட்டப்பட்டனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை கீதா, உதவி தலைமை ஆசிரியை கல்பனா, முதுகலை ஆசிரியர் சுப்பிரமணி, உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.