கொடைக்கானல்: பள்ளி அருகே கஞ்சா விற்க முயன்ற இருவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் மலைப்பகுதி உலக சுற்றுலாத் தளமாக கருதப்பட்டு வருகிறது. கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் அமைந்துள்ள இயற்கை அழகினை ரசிப்பதற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே கொடைக்கானலில் போதைப் பொருட்களான கஞ்சா, காளான் ஆகியவற்றை விற்போரை காவல் துறையினர் கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் பள்ளி வளாகம் அருகாமையில் இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கொடைக்கானல் உதவி காவல் ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் கஞ்சா விற்க முயன்ற நித்தின் மற்றும் சங்கர் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா கொண்டுவரப்பட்டது, எவ்வாறு இவர்களுக்கு கிடைத்தது என்பது பற்றி பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி