சத்திரப்பட்டி: மருத்துவக் கழிவுகள்.. லாரி திடீர் சோதனை

ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இந்நிலையில் சத்திரப்பட்டி சுங்கச்சாவடி அருகே கேரளா பதிவெண் கொண்ட கண்டைனர் லாரி ஒன்று பஞ்சராகி நின்றது. ஆனால் அந்த கண்டைனரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்த சம்பவம் அரங்கேறியது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. எனவே கேரளா பதிவெண் கொண்ட கண்டைனர் லாரி என்பதால் சுங்கச்சாவடி ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள் சத்திரப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து லாரியில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மீன் இறைச்சி கழிவுகளை தூத்துக்குடிக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனாலும் போலீசார், லாரியின் கண்டைனரை திறந்து பார்த்தனர். அப்போது அதில் மீன், நண்டு இறைச்சி கழிவுகள் இருந்தன. தொடர்ந்து அதற்கான ஆவணங்களை சரிபார்த்தனர். 

அதில், மீன் இறைச்சி கழிவுகளில் இருந்து ஒரு வகை எண்ணெய் தயாரிக்க கேரளாவில் இருந்து தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவன ஆலைக்கு கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் அந்த லாரியை அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி