நிலக்கோட்டை: 13 வயது பள்ளி மாணவி தூக்கிலிட்டு தற்கொலை

நிலக்கோட்டை நாகலிங்க கோவில் தெருவை சேர்ந்தவர் 13 வயது சிறுமி ஒருவர் நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மாணவியால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் படிப்பில் பின்தங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளியிலும் வீட்டிலும் தனது படிப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதால் மாணவி மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். 

இதனிடையே நிகழ்வு நேரத்தில் வீட்டின் குளியலறைக்குள் சென்ற பள்ளி மாணவி நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. வீட்டிலிருந்தவர்கள் குளியலறை கதவை உடைத்து பார்த்தபோது துப்பட்டாவில் தூக்கிலிட்டுக் கொண்டிருந்தார். மாணவியை மீட்டுப் பெற்றோர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்ததை தொடர்ந்து மாணவியின் உடல் உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் தொடர்பாக புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த நிலக்கோட்டை போலீசார் பள்ளி மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி