திண்டுக்கல்: கூடுதல் மாணவர்களை ஏற்றிய ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூரில் கூடுதலாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற 5 ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ரூ. 1.5 லட்சம் அபராதம் விதித்தனர். 

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களில் காலை, மாலையில் அதிகளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதைத் தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து நேற்று காலை வட்டார பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் அலுவலர்கள் அம்மைநாயக்கனூர் பகுதியில் ஆய்வு செய்தனர். 

அதிகளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோக்களை நிறுத்தினர். விசாரணையில் தகுதிச்சான்று உள்ளிட்ட முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாதது தெரிந்தது. ஐந்து ஆட்டோக்களை பறிமுதல் செய்த அலுவலர்கள் ரூ. 1.5 லட்சம் அபராதம் விதித்தனர்.

தொடர்புடைய செய்தி