திண்டுக்கல்: காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல்

கரூர் மாவட்டம் நெய்தலூர் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் 20க்கும் மேற்பட்டோர் கொடைக்கானல் சுற்றுலா செல்வதற்காக ஒரு வேனில் வந்து கொண்டிருந்தனர். காலை வத்தலகுண்டு புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக சுற்றுலா வேன் பயங்கரமாக மோதி சாலையில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் சுற்றுலா வேனில் பயணம் செய்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் பரணி(19) என்ற இளைஞர் நிகழ்விடத்தில் பலியானார். மேலும் நவநீதகிருஷ்ணன்(19), சுதர்சன்(19), கிருத்திக் ரோஷன்(18), சபரி(19), தனுஷ்(18), அஜய் ராஜ்(18) உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திண்டுக்கல் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை கிழக்கு மாவட்டச் செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில் குமார் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்புடைய செய்தி