தர்மபுரி: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர் பலி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட மஜித் கோவில் தெருவை சேர்ந்தவர் ஷான் பாஷா. இவரது மகன் ரூகன் இவர் பாலக்கோடு உள்ள அரசு பொலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி ரூகன் தனது நண்பர்களுடன் ஓகேனக்கல்லுக்கு சென்றார். இதையடுத்து அவர்கள் ஓகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர். பின்னர் நாடார் கொட்டாய் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது ரூகன் எதிர்பாராத விதமாக காவிரி ஆற்றின் சுழலில் சிக்கி அடித்து செல்லப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக ஓகேனக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ரூகன் உடலை இறந்த நிலையில் மீட்டனர். 

பின்னர் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பென்னாகரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி