தர்மபுரி: ஆட்சியரிடம் மனு வழங்கிய பட்டதாரி ஆசிரியர்கள்

தர்மபுரி மாவட்ட பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் நேற்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆட்சியர் சாந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, கடந்த 2023-2024-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான 3192 இடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது. 2024-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி அதற்கான தேர்வு நடத்தியது. தொடர்ந்து மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன் மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்து கொண்டனர். 

அதன்பின் ஆகஸ்டு மாதம் வெளியிட்ட உத்தேச தேர்வுப்பட்டியலும் வெளியானது. இந்த உத்தேச தேர்வுப்பட்டியல் வெளியிட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் எங்களுக்கு இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை. எனவே எங்களின் குடும்ப வாழ்வாதாரம் கருதி எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநருக்கான கலந்தாய்வினை உடனே நடத்த வேண்டும். தொடர்ந்து அதற்கான பணி ஆணை வழங்க பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி