தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தீர்த்தமலை பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருத்தலம். இந்த கோவிலுக்கு பல்வேறு புராண கதைகள் உண்டு. மேலும் இந்த கோவிலில் பல்வேறு தீர்த்தங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன. தினமும் இங்கு சுவாமிக்கு மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த கோவிலில் மார்ச் 18 இன்று திருத்தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு தீர்த்தமலை, மலையின் அடிவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'ஓம் நமச்சிவாய' என்ற பக்தி முழக்கத்துடன் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காவலர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.