அன்னூர்: ரம்ஜான் பண்டிகை; சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கோவை மாவட்டம் அன்னூர் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. சுமார் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

அன்னூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் முக்கியத் தொழிலாக இருந்தாலும், ஆடு வளர்ப்பும் பிரதானமாக உள்ளது. இங்குள்ள மேய்ச்சல் நிலங்கள் ஆடு வளர்ப்பிற்கு ஏற்ற சூழலை வழங்குகின்றன. வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் அன்னூர் சந்தையில், ரம்ஜான் பண்டிகை நெருங்குவதால், இந்த வாரம் ஆடுகள் விற்பனை நேற்று அதிகாலை 5 மணி முதலே களைகட்டியது. 

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்க வந்திருந்தனர். வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, மலையாடு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. 

ஆட்டுக்குட்டிகள் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரையிலும், பெரிய ஆடுகள் ரூ.5,000 முதல் அதிகபட்சமாக ரூ.25,000 வரையிலும் விற்பனையானது. ஒரே நாளில் ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி