கோவை: திருமணம் செய்து வைக்க கோரி உறவினருக்கு கத்திக்குத்து

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஜீயாபுதின்(46). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஷர்மிளா (44). இவரது உறவினர் கோவை போத்தனூர் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் நிஹார்(30). இவர் ஷர்மிளாவின் தம்பி மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். 

ஆனால் அதற்கு ஷர்மிளாவின் கணவர் ஜீயாபுதின் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் நேற்று ஜீயாபுதின் மற்றும் அவரது மகள் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த நிஹார் மீண்டும் ஜீயாபுதினிடம், ஷர்மிளாவின் தம்பி மகளை திருமணம் செய்து வைக்க கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த நிஹார் கத்தியால் ஜீயாபுதினை குத்தினார். காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஷர்மிளா போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து நிஹாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி