கோவை: பெண் பயணியிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் நேற்று வழக்கமான சோதனையின்போது, பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த பெண் பயணி ஒருவரிடம் 9 மிமீ ரக துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரளா ராமகிருஷ்ணன் என்ற அந்த பெண் பயணி, தனது உடைமைகளை சோதனைக்கு உட்படுத்தியபோது, அவரது பையில் துப்பாக்கி குண்டு இருந்ததை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.

உடனடியாக, அப்பெண் பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சரளா ராமகிருஷ்ணன் கோவையைச் சேர்ந்த பிரபல ராமகிருஷ்ணா குழும அறக்கட்டளையின் அறங்காவலர் ஒருவரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது. பெங்களூருக்குப் புறப்படும் அவசரத்தில், துப்பாக்கி குண்டு பையில் இருந்ததை கவனிக்காமல் எடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி