கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம் கற்பிக்கப்பட்டு தமிழ் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். உலக அளவில் தமிழ் மொழியின் பெருமையைப் பேசும் மத்திய அரசு, தமிழ்நாட்டிலேயே தமிழ் கற்பித்தலை உறுதி செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பினர். தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.