கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, மருதமலை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் உலா வருகின்றன. இவ்வாறு வரும் காட்டு யானைகள் விளைநிலங்களையும், கடைகளையும் சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. நேற்று (நவம்பர் 24) நள்ளிரவு தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் ரேஷன் கடையை சேதப்படுத்தி உள்ளே இருந்த அரிசி உள்ளிட்ட பொருட்களை உண்டு சென்றுள்ளன.
சத்தம் கேட்டு வந்த ஊர்மக்கள் யானைகளை விரட்டியடித்தனர். இந்நிலையில் யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.