வெள்ளிகுலத்தினர் மற்றும் பாலமலை பழங்குடியினருக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இந்து சமய அறநிலையத்துறையினர் தன்னிச்சையாக அறங்காவலர்களை நியமித்ததாக பக்தர்கள் குற்றம் சாட்டினர். மகாசபை ஒப்புதல் இல்லாமல் நியமனம் செய்ததை எதிர்த்து, கோவில் வளாகத்தில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனால், கோவில் நிர்வாகத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பூச்சியூர் ஊர் கவுண்டர் சரவணகுமார் தலைமையில் திரண்ட பக்தர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முறையிட்டனர். கோவிலை கைப்பற்ற காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் முயற்சி செய்கின்றனர். இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம், என சரவணகுமார் கூறினார். போலீசார் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சட்டப்படி தீர்வு காண அறிவுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.