சென்னை: ரூ.20ஆயிரம் லஞ்சம்..எஸ்ஐ காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் கே. கே. நகர் உதவி ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை வடபழனி, ஏவிஎம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சங்கர். இவர் சென்னை வளசரவாக்கத்தில் சொந்தமாக ஐ. டி நிறுவனம் நடத்தி வருகிறார்.

கடந்த மாதம் 3-ம் தேதி பீரோவில் இருந்த நகையை சரிபார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தன. இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். உரிய விசாரணை நடத்த கே. கே. நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, அக்காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் விசாரணை மேற்கொண்டார்.

புகார் குறித்து விசாரிக்க, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், அவரது நண்பர் எண்ணுக்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சமாக அனுப்ப கேட்டுக் கொண்டதாகவும், சங்கர் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. லஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்டும், உரிய விசாரணை நடத்தாமல் புகார்தாரரை, உதவி ஆய்வாளர் அநாகரிகமாகப் பேசியதாக கூறப்படுகிறது. உயர் அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

வடபழனி காவல் சரக உதவி ஆணையர் நேற்று முன்தினம் (அக்.2) விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், புகாருக்கு உள்ளான உதவி ஆய்வாளர் ராஜேந்திரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி