சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறியது, சென்னை மாநகரில் இரவு நேரங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காந்தி மண்டபம், காமராஜர் நினைவிடங்களில் பகல் நேரங்களில் தொழிலாளர்கள் சுத்தம் செய்கின்றனர். சுத்தத்துக்கு நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம்.
மதுபாட்டில் காந்தி மண்டபத்தில் கிடந்ததாக மன உளைச்சலை ஆளுநர் கூறியுள்ளார். சூதாட்டத்தையும் காந்தி தடுத்தார். ஆனால், பலவித சூதாட்டங்கள் நடைபெறத்தான் செய்கின்றன. முதல்வரின் அரசு மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவான அரசு. ஆனால், மதுவை தமிழகம் மட்டும் ஒழிக்க இயலாது. அனைத்து மாநிலங்களும் சேர்ந்தால்தான் ஒழிக்க முடியும். மத்திய அரசு கையில் எடுக்க வேண்டும். தமிழக அரசால் முடியாது.
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு அதிகளவில் முன்னுரிமை கொடுக்கப்படும். தமிழகத்தில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட கிடையாது. ஆனால் பக்கத்து மாநிலங்களில் இருப்பதால், இந்தியா முழுவதற்கும் கொள்கை கொண்டுவந்தால் ஒழிக்க முடியும். தமிழகத்தில் மட்டும் மதுவை ஒழியுங்கள் என்றால் முடியாது என தெரிவித்தார்.