மத்திய அரசின் இந்திய செயற்கை கால்கள் உற்பத்தி நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கும் ஏடிஐபி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களை வழங்கும் அளவீட்டு முகாம் சென்னையில் வரும் 25-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து திருவொற்றியூர் மண்டலத்தில் புழல் போபிலி ராஜா பள்ளியில் நாளையும், 24-ம் தேதி திருவிக நகர், பல்லவன்சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், 25-ம் தேதி கொருக்குப்பேட்டை ரயில்வே நிலையம் அருகே மீனாம்பாள் நகரிலும் முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல், வழிகாட்டும் ஸ்டிக், பிரெய்லி கிட், ஸ்மார்ட்போன், மூன்று சக்கர நாற்காலி, காதொலிக்கருவி, முட நீக்கியல் சாதனம் உள்ளிட்ட பல சாதனங்கள் வழங்கப்படும். உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், மருத்துவ சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, மாற்றுத்திறனாளிகளுக்கான தனி அடையாள அட்டையின் ஆகியவற்றின் நகலை அசலுடன் கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.