சென்னை: மாணவரும், ஊழியரும் மோதும் பரபரப்பு வீடியோ

சென்னை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் மாணவரும், ஊழியரும் மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆல்பர்ட். சென்னை கேகே நகர் இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் 4 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இவர் அங்குள்ள இஎஸ்ஐ விடுதியில் தங்கி உள்ளார். நேற்றிரவு ஆல்பர்ட் சுவிகியில் உணவு ஆர்டர் செய்தார். அதனை டெலிவரி செய்வதற்காக உணவு டெலிவரிபாய் கேகே நகர் இஎஸ்ஐ அரசு மருத்துவமனை மாணவர் விடுதிக்கு வந்தார். 

ஆனால் விடுதி காவலாளி அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அந்த நபர் ஆர்டர் செய்த மாணவர் ஆல்பர்ட்டுக்கு போன் செய்து தெரிவித்தார். உடனே ஆல்பர்ட் விடுதி அறையில் இருந்து வெளியே வந்து உணவு டெலிவரி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி காவலாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. 

அப்போது காவலாளி மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து டீன் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர் பாலாஜி ரீகன் என்பவர் வந்து மாணவர் ஆல்பர்ட்டிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பிறகு இது வாக்குவாதமாக முற்றியது. இருவரும் கைகலால் ஒருவரை தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையின் டீன் காளிதாஸ் தத்தாரியா ஷவான் இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எம்ஜிஆர் நகர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி