சென்னை: கத்தியை காட்டி மிரட்டி 3 பேர் கைது

சென்னை சவுகார்பேட்டை மின்ட் தெரு பகுதியில் சில தினங்களுக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை, வேறு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரது பையை அறுத்து சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக பூக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனங்களில் நம்பர் பிளேட் இல்லாததால் மர்ம நபர்களை தேடுவதில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய பூக்கடை பகுதியைச் சேர்ந்த நரேஷ், கண்ணன், மகேஷ் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். 

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட நபர் தலைமறைவாக உள்ளதாகவும், அவரின் வழிகாட்டுதலின் பேரில் ஹரி பிரசாத்தின் பையை மிரட்டி பறித்து சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கில் பணம் இருக்கும் என நினைத்து வழிப்பறியில் ஈடுபட்ட நிலையில் அந்த பையில் பணம் இல்லை என்பதால் அதிருப்தி ஏற்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கைது நடவடிக்கையின் போது கீழே விழுந்ததால் குற்றவாளிகள் இருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள முக்கிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி