சென்னையில் ஆசிட் வீச்சு: ஒருவர் கைது

புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரை சேர்ந்தவர் தினேஷ் (37). தமிழக வெற்றி கழக உறுப்பினர். இவர், நேற்று (மார்ச்.25) அதே பகுதியில் தமிழக வெற்றி கழக பெயர் பலகை வைத்துகொண்டிருந்தார். 

அப்போது அதே பகுதியை சேர்ந்த தமிழக வெற்றி கழக உறுப்பினர் சரத் என்பவரின் சித்தப்பா அந்த வழியாக வந்தபோது அவருக்கு தினேஷ் வணக்கம் கூறினார். இதை பார்த்து கோபமடைந்த சரத், எதற்காக அவருக்கு வணக்கம் சொன்னாய் என கேட்டு மதுபோதையில் தகராறு செய்துள்ளார். இதனால் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த சரத்தின் அண்ணன், இருவரையும் சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து நேற்று சரத், தனது நண்பர்களுடன் தினேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த தினேஷை சரமாரி தாக்கி பாத்ரூம் கழுவும் அசிட்டை எடுத்து அவரது தலையில் ஊற்றிவிட்டு தப்பினர். 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்த தினேஷை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தினேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில், சரத் (24), நண்பர்களான சுபான் (20), ஜீவா நகரை சேர்ந்த சுரேஷ் ஆண்ட்ரூஸ் (31), மங்கம்மாதோட்டத்தை சேர்ந்த அரவிந்தன் (33) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி