சென்னை: மாணவி தூக்கிட்டு தற்கொலை; காதலன் கைது

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் பவானி (34). இவரது கணவர் நரேந்திரன். 4 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகள் ஸ்வேதா (15). இவர் பட்டாளம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது மாணவி, ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரியவந்ததும் ஸ்வேதாவை பள்ளியில் இருந்து பாதியிலேயே நிறுத்திவிட்டனர்.  
இந்தநிலையில், கடந்த மே மாதம் மாணவி ஸ்வேதா வீட்டைவிட்டு சென்றுவிட்டார். 

இதுபற்றி மாணவியின் தாய் கொடுத்த புகாரின்படி, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி மாணவியை மீட்டு கெல்லிசில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே காப்பகத்தில் இருந்து ஸ்வேதாவை வீட்டிற்கு அழைத்துவந்தனர். 

இதன்பிறகு மாணவி, வாலிபருடன் பேசிவந்ததால் பவானியின் தாய் வீட்டில் மாணவியை தங்கவைத்தனர். இங்கிருந்து நேற்று (டிசம்பர் 21) மதியம் மாணவி, வாலிபருடன் செல்போனில் பேசியதால் பாட்டி விஜயா, சித்தி கலைவாணி ஆகியோர் செல்போனை வாங்கிவைத்துக்கொண்டு மாணவியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு கடைக்கு சென்றுவிட்டனர். 

அவர்கள் மாலை 6 மணிக்கு வந்தபோது உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லை. இதனால் ஜன்னல் வழியாக பார்த்தபோது மின்விசிறியில் மாணவி தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. காதலனை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி