சென்னை: மாணவி தூக்கிட்டு தற்கொலை

புளியந்தோப்பு வஉசி நகர் 12வது தெருவை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு ஓவியா, அஸ்வினி என்ற 2 மகள்கள். சதீஷ், ஆடுதொட்டியில் கூலி வேலை செய்து வருகிறார். 15 வயதாகும் 2வது மகள் அஸ்வினி அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். 

கடந்த 3 மாதங்களாகவே அஸ்வினி மன அழுத்தம் காரணமாக பல்வேறு தகவல்களை தனது பெற்றோரிடம் கூறிவந்துள்ளார். மேலும் இவருக்கு பழக்கமான ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்த லதா என்பவர் சமீபத்தில் இறந்து விட்டார். அவர் தன்னை அழைப்பதாகவும், பயமாக இருக்கிறது எனவும் அஸ்வினி கூறி வந்துள்ளார். 

இதற்காக சதீஷ் தனது மகளை பல்வேறு கோயில்களுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். மேலும் மருத்துவர்களிடமும் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (மார்ச் 12) இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஸ்வினி துப்பட்டாவால் வீட்டில் உள்ள கம்பியில் தூக்கில் தொங்கினார். வெளியே சென்று இருந்த அவரது பெற்றோர் வந்து பார்த்தபோது சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார். 

உடனடியாக அஸ்வினியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அஸ்வினியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி