சென்னைக்கான கொரியா குடியரசு தூதரகத்தின் தலைவர் சாங் நியுன் கிம், விழாவை தொடங்கி வைத்து, மோகினியாட்டக் கலைஞர் டாக்டர் நீனா பிரசாத்துக்கு 'நிருத்திய கலாநிதி' விருதை வழங்கினார். தொடர்ந்து அகாடமியின் நாட்டிய விழா மலரையும் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய சாங் நியுன் கிம், கடந்த 50 ஆண்டுகளாக கலை, பண்பாட்டு ரீதியாக இந்தியா - கொரியா கலாச்சாரங்களுக்கு இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. சென்னையிலேயே 5,000-க்கும் அதிகமானவர்கள் எங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.
சென்னையில் இருக்கும் 'இன்கோ' சென்டரில் பல்வேறு இந்திய - கொரிய கலாச்சார நிகழ்வுகள் நடக்கின்றன. அந்த வகையில் மியூசிக் அகாடமியின் இந்த பெருமை மிகுந்த நாட்டிய விழாவில் பங்கெடுப்பதில் மகிழ்கிறேன். மியூசிக் அகாடமி கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக இசை, நாட்டிய கலை வடிவங்களுக்கு செய்துவரும் சேவை மகத்தானது என அவர் பேசினார்.