மீனவர்களை விடுவிக்கவும்: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று எழுதிய கடிதத்தில்,  தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கிறது. புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இந்த பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகள் தமிழக மீனவர்களுக்கு பல தலைமுறைகளாக வாழ்வாதாரமாக திகழும் நிலையில், மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீனவர் சமூகத்தினருக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடந்த ஜூலை 21ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம், கடந்த செப் 3ம் தேதி ரூ. 1. 5 கோடி அபராதம் விதித்துள்ளது. இது ஏற்கெனவே துயரத்தில் உள்ள மீனவ குடும்பங்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. எனவே, இலங்கை வசம் உள்ள மீன்பிடி படகுகளை விடுவிக்கவும், மீனவர்களை தாயகம் அழைத்து வரவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி