கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டதை பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ். வி. சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி - எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ். வி. சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் எஸ் வி. சேகர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் மறு உத்தரவு வரும்வரை நடிகர் எஸ். வி. சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி பி. வேல்முருகன், நடிகர் எஸ். வி. சேகருக்கு வழங்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.