இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024–25-ம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், ஒருகால பூஜைத்திட்ட கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களின் குழந்தைகள் நலன்கருதி, நடப்பாண்டு 500 மாணவர்களுக்கு மேற்படிப்புக்காக தலா ரூ. 10 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதை செயல்படுத்தும் வகையில், பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி மேம்பாட்டு மைய நிதி மூலம் 500 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதன் அடையாளமாக 10 மாணவர்களுக்கு தலா ரூ. 10ஆயிரத்துக்கான வங்கி வரைவோலைகளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதன் மூலம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற உயர் கல்வி பயிலும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் பயனடைவர். கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் மூலம் 400 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு, தலைமைச் செயலர் நா. முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.