சென்னை: அக். 30க்குள் செலுத்தினால் குடிநீர் வரி 5% தள்ளுபடி

சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை அக். 30-க்குள் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுதோறும் இருமுறை பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் உரிய காலக்கட்டத்துக்குள் வரியை செலுத்துவோர்களை ஊக்குவிப்பதற்காக இன்று(அக். 1) முதல் அக். 30-க்குள் முழுமையாக செலுத்துவோருக்கு முதன்முறையாக 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த 5 சதவீதம் ஊக்கத் தொகையானது நடப்பு கேட்புத் தொகைக்கு மட்டுமே வழங்கப்படும். இம்முறையானது 2-வது அரையாண்டு தொடங்கும் நாளான இன்று முதல் அமலுக்கு வருகிறது.

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது 2024-25 நிதியாண்டின் 2-ம் அரையாண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை அக். 30-ம்தேதிக்குள் முழுமையாக வாரியத்துக்கு செலுத்தி 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 1, 500 தள்ளுபடி பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி