தாயின் சடலத்தை வீட்டில் வைத்து சடங்குகளை செய்து மகன் தற்கொலை

பெரம்பலூர், கிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் ஸ்ரீராம்குமார்(34). காரைக்குடியை பூர்வீகமாகக் கொண்ட இவர் கடந்த சில ஆண்டுகளாக பெரம்பலூரில் தனது 70 வயது தாயாருடன் வசித்து வருவதாகவும், தற்பொழுது இருக்கும் வீட்டில் கடந்த ஓர் ஆண்டாக வாடகைக்கு குடியிருந்து வருகின்றார். இந்நிலையில் அவரது தாயார் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருந்ததாகவும் புகைப்பட கலைஞரான இவர் நாள்தோறும் திருச்சிக்கு வேலைக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

திருமணம் ஆகாத நிலையில் ஸ்ரீராம்குமார், அவரது தாயாரை கவனித்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவரது தாயர் உயிரிழந்தார். தொடர்ந்து தனது தாயாரின் உடலை தான் வாடகைக்கு குடியிருந்து வரும் வீட்டில் ஸ்ரீராம்குமார் சடங்கு சம்பிரதாயங்கள் செய்து உள்ளார். தொடர்ந்து வீட்டை உட்புறமாக பூட்டிய ஸ்ரீராம்குமார் வீட்டின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவர்கள் கடந்த 10 தினங்களாக வெளியில் நடமாடவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்து அதிக அளவில் துர்நாற்றம் வருவதை அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் பெரம்பலூர் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஸ்ரீராம் குமாரும், அவரது தாயார் உடலும் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி