திருச்சி: தாய் தந்தை தகராறு; 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

திருச்சி பாலக்கரையில் ஒன்பதாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மகள் புவனேஸ்வரி (வயது 14) இவர் பாலக்கரை இருதயபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவரது தாயும், தந்தையும் பிரிந்து வாழ்கின்றனர். 

கடந்த ஏழு வருடங்களாக பிரிந்து வாழும் நிலையில் தாய்க்கும், தந்தைக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் புவனேஸ்வரி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத போது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். 

இதுகுறித்து அவரது தந்தை ரமேஷ் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மன உளைச்சலில் பள்ளி மாணவி தீக்குளித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி