ஊராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொது மக்கள் மனு
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பெரவள்ளூர் போரக்ஸ் நகரில் சர்வே எண். 124/11-ல் பெரிய ஏரியும், சர்வே எண்-126/12-ல் கால்வாயும் அமைந்துள்ளது. இந்த இடங்களில் தனியார் நிறுவனம் ஒன்று ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனை பிரிவுகளுக்கான அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அறிந்து பெரவள்ளூர் கிராம பொதுமக்கள் இந்த பணிகளை உடனடியாக நிறுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்துள்ளனர். ஆனாலும் பணிகளை நிறுத்தாமல் லேயவுட் போடும் பணிகளை தனியார் நிறுவனம் தொடர்ந்து செய்து வருவதால் மீண்டும் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரவள்ளூர் கிராம பொதுமக்கள் புகார் மனுவை அளித்தனர். நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியரை கண்டிப்பதாகவும், வருகின்ற திங்கட்கிழமை இதுகுறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் கூறினர்.