தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் அட்டைகளை வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்புக் குழுவினர் காவல் துணை காவல் கண்காணிப்பாளர் முருகன் மேற்பார்வையில், ஆய்வாளர் மஞ்சுளா தலைமையில், உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், தலைமைக் காவலர்கள் கோபால், கார்த்திக் ஆகியோர் மல்லிப்பட்டினம் துறைமுகப் பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் வைத்திருந்த வெள்ளை நிற கேனை சோதனை செய்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை 25 கடல் அட்டைகளை வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடல் அட்டைகளை வைத்திருந்த சின்னமனை கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரையும், அவர் வைத்திருந்த கடல் அட்டைகளையும், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ். சந்திரசேகரனிடம் ஒப்படைத்தனர்.