காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பென்னலூர் ஊராட்சியில் 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியினர், பென்னலூர் வழியாக, ஸ்ரீபெரும்புதூர் -- குன்றத்தூர் சாலையை இணைக்கும், பென்னலூர் பிரதான சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்களில் சென்று வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, காஞ்சிபுரம், குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் இப்பகுதியினர் சென்று வருகின்றனர். தவிர, தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள் அதிகம் செல்லும் சாலையாக இது உள்ளது. இந்த சாலையில், ராஜலட்சுமி மருத்துவக் கல்லூரி அருகே, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் உபரிநீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் மீது அமைந்துள்ள சிறுபாலத்தில் தடுப்பு இல்லை.
இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுப்பு இல்லாத பாலத்தின் மீது செல்லும் போது, விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. குறிப்பாக, இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் போது, எதிர்பாராத விதமாக உபரிநீர் கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சிறுபாலத்தின் மீது தடுப்பு அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.