கோவை: தொடரும் எல்பிஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தம்

54பார்த்தது
தென் மண்டல எல். பி. ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், எண்ணெய் நிறுவனங்கள் விதித்த புதிய டெண்டர் விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருக்கு இடையே கோவையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் மும்பை தலைமை அலுவலகத்தில் இருந்து செயல் இயக்குனர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.  டெண்டர் விடுவதற்கு எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரண்டு அச்சு லாரிகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.  சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருந்தபோதிலும், இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால், லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

தொடர்புடைய செய்தி