திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்திற்கு கூட்டாக மனு கொடுக்க வந்தனர். கலெக்டர் இல்லாததால் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் முறைப்படி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள். நாங்கள் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு பதவிக்கு வந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறோம்.
ஆனால் கடந்த சில நாட்களாக வருகிற டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் 2021-ம் ஆண்டில் நடைபெற்ற 9 மாவட்ட உள்ளாட்சிகளையும் கலைத்துவிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசு பரிசீலிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருப்பது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் எவ்வளவு என்பதை தெளிவுபடுத்தி, எங்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து அரசிடமிருந்து எங்களின் பதவி காலத்தை உறுதிப்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.