திருப்பத்தூர் மாவட்டம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த 14 வயது மகள் கடந்த 6ம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தாய் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் பாலாஜி (42) என்பவரின் வீட்டில் சிறுமியும் கடத்திச் சென்ற வாலிபரும் தங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு கடத்திச் சென்ற வாலிபரையும் அடைக்கலம் கொடுத்த நபரையும் கைது செய்து திருப்பத்தூர் நகர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் விமல் ராஜ் (24) என்பதும் அடைக்கலம் கொடுத்தவர் இவரது சித்தப்பா என்பதும் தெரியவந்தது. மேலும் 14 வயது சிறுமியை கடந்த 6ம் தேதி ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.