புத்தாண்டை கொண்டாட சென்று சோழவரம் ஏரியில் மாயமான இளைஞர் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் தேடி மீட்டனர். போலீசார் விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த நல்லூர் பகுதியை சேர்ந்த ஜான்ராஜ்பீட்டர் (27) சென்னையில் உள்ள ஆய்வகத்தில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். கடந்த 31ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாடுவதற்காக சென்று விட்டு மறுநாள் வீடு திரும்பாத நிலையில் பல இடங்களில் தேடிய போது சோழவரம் ஏரியின் கரையில் இருச்சக்கர வாகனமும், காலணியும் மட்டுமே இருந்துள்ளது. குடும்பத்தினர் தேடியும் கிடைக்காததால் இது குறித்து சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சோழவரம் ஏரியில் நீண்ட நேரம் தேடுதல் வேட்டைக்கு பிறகு மாயமான ஜான்ராஜ் பீட்டரை சடலமாக மீட்டனர். இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தாண்டை கொண்டாட சென்ற இளைஞர் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.