மாதவரத்தை அடுத்த பெரிய மாத்தூர் கொசப்பூர் ரோட்டில் முத்து மோட்டார்ஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் சின்னதுரை ஆவார். இங்கு பழைய லாரி உதிரி பாகங்கள் வாங்கி சேமித்து வைக்கும் திறந்தவெளி குடோன் உள்ளது. இவர் கடந்த 10வருடங்களாக பழைய லாரிகளை வாங்கி அதை பிரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இன்று மதியம் ஊழியர்கள் குடோன் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த போது கேஸ் கட்டிங் மிஷினில் இருந்து தீப்பொறி பட்டு குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைப்பார்த்து ஊழியர்கள் வெளியே வந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாதவரம் பால்பண்ணை காவல்துறையினர் மற்றும் மணலி மற்றும் மாதவரம், செங்குன்றம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தீவிபத்து நடந்த குடோன் அருகே உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு கரும்புகை பரவுவதால் மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும், இந்த புகையால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அவதியடைந்தனர். மருத்துவமனையில் இருந்த பல மருத்துவ உபகரணங்களும் புகையால் நாசமானதாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இந்த விபத்து குறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.