நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
சிறப்பு பஸ்கள் இயக்கம்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகிற 17, 18-ந் தேதிகளில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் அனைத்து முக்கிய பஸ் நிலையங்களிலும் பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பஸ்களை இயக்கவும், போக்குவரத்தை கண்காணித்து சீர்படுத்தவும் 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியாற்றும் வகையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை மற்றும் பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.