சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு அ. தி. மு. க. பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் நாடாளுமன்ற தொகுதி அ. தி. மு. க. வேட்பாளர் விக்னேசை ஆதரித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே பெரியார் மேம்பாலத்தில் அனுமதியின்றி அ. தி. மு. க. கொடி கட்டியிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பறக்கும் படை அலுவலர் சஞ்சீவ்குமார் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சேலம் மாநகர் மாவட்ட அ. தி. மு. க. செயலாளர் ஜி. வெங்கடாஜலம், பாலசுப்பிரமணியன் எம். எல். ஏ. உள்பட 8 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.