குன்னூர்: கிராமமே விழா கோலத்தில்...வீடியோ!

3669பார்த்தது
குன்னூர் அருகே உள்ள ஜெகதளா கிராமத்தில் படுகரின மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஹெத்தையம்மன் திருவிழா, பக்தர்கள் வெள்ளத்தில் உற்சாகமாக நடந்தது.

நீலகிரியில் உள்ள படுகரின மக்களின் முக்கிய பண்டிகையான ஹெத்தையம்மன் பண்டிகை கடந்த சில நாளாக நடந்து வருகிறது. குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தை சுற்றியுள்ள காரக்கொரை, மஞ்சுதளா, மல்லிகொரை, பேரட்டி, ஓதனட்டி, பிக்கட்டி உட்பட ஆறு ஊர்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து விழாவை கொண்டாடுகின்றனர்.

விரதம் இருந்த ஹெத்தைக்காரர்கள் கடந்த ஏழு நாளாக, காரக்கொரை கிராமத்தில் உள்ள "மக்கமனை' என்ற கோவிலில் தங்கி, சிறப்பு பூஜை நடத்தினர். பின், ஹெத்தையம்மன் குடையை ஏந்தியவாறு, ஆறு ஊர்களில் உள்ள கோவில்களுக்கும் சென்று, சிறப்பு பூஜை செய்தனர். கடந்த இரு நாளுக்கு முன் காரக்கொரை கோவில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூ குண்டம் இறங்கி, நேர்த்தி கடன் செலுத்தினர்.

இன்று காலை ஆறு ஊர் படுகரின மக்கள் வெள்ளை சீலை போர்த்தி, பாரம்பரிய உடையணித்து, பேண்டு வாத்திய இசைக்கு மத்தியில், ஹெத்தையம்மன் குடையை ஏந்தியவாறு, பாரம்பரிய நடனமாடியபடி ஜெகதளா கிராமத்துக்கு ஊர்வலமாக வந்தனர். மதியம் 1. 30 மணிக்கு ஜெகதளா கிராமத்தில் "மடிமனை' என்ற இடத்தில் உள்ள ஹெத்தையம்மன் சிலையை அலங்கரித்து, ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

இதில் பங்கேற்ற 10, 000க்ககும் மேற்பட்ட பக்தர்களால் ஜெகதளா கிராமம் திணறியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி