தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா ராமசாமிபுரம் காலனியை சேர்ந்த கண்ணன் என்பவர் ஹைதராபாத்தில் 20 ஆண்டுகளாக முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது மூத்த மகள் கவுசல்யா (18) மதுரை மீனாட்சி அரசு கல்லூரியில் பி. காம். முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். இவர் செல்போனில் அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார். இந்நிலையில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்ற கவுசல்யா வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கவுல்யா தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து கண்ணன் சிந்துபட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.