100 நாள் வேலையில் நீர் ஆதார பணிக்கு முக்கியத்துவம்

65பார்த்தது
100 நாள் வேலையில் நீர் ஆதார பணிக்கு முக்கியத்துவம்
வாலாஜாபாத் ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள் உள்ளடங்கி உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கான செயலர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயக்குமார் பங்கேற்று, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், பயனுள்ள வகையிலான பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே பணிகள் மேற்கொண்ட பகுதியில், அதே பணியை மீண்டும் செய்ய வேண்டாம். ஊராட்சிகள்தோறும் நீர் நிலைகளை பராமரிப்பதோடு, புதிய நீர் ஆதாரம் ஏற்படுத்த திட்டமிடல் வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்களைக் கொண்டு, புதிய குளங்களை நுட்பமான முறையில் அமைக்க வேண்டும்.

கால்வாய்கள் மற்றும் விவசாய நில வரப்புகள் பராமரித்தல், மர கன்றுகள் நடவு செய்தல் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தினார்.

மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்ய உதவுமாறு வலியுறுத்தினார். வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி