செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம நத்தம் போன்ற ஆட்சேபனை இல்லாத நிலையில் உள்ள அரசு நிலங்களில் வசித்தாலும், அவர்களுக்கு நீண்ட காலமாக பட்டா வழங்காத நிலை இருந்தது. தற்போது, ஆட்சேபனை இல்லாத அரசு நிலத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், தமிழக பட்ஜெட்டிலும் பட்டா வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால், பட்டா கேட்டு மனு அளிப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
பட்டா வழங்குவதற்கான விவரங்களை, வருவாய்த் துறையினர் சேகரித்து வருகின்றனர். மறுபுறம் பொதுமக்களும் கோரிக்கை மனுக்களை வருவாய்த் துறைக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், பட்டா வழங்கக்கூடிய ஆட்சேபனையற்ற நிலமாக இருந்தாலும், அதில் வீடு இருக்க வேண்டும். வீட்டு வரி ரசீது, மின்சார இணைப்பு அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் சரிபார்க்கப்படுகின்றன.
இதனால், திருப்போரூர் வட்டத்தில் உள்ள கிராமங்களில், காலி இடங்களில் மக்கள் குடிசை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அதிக விலை கொடுத்து பட்டா இடம் வாங்குவதை விட, குறைந்த விலையில் பட்டா இல்லாத இடத்தை வாங்கி, பின் பட்டா பெறலாம் எனவும், வெளியூர் மக்கள் இடத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.