மதுரமங்கலம் அடுத்த, பிச்சிவாக்கம் ஊராட்சியில், பட்டுமுடையார் குப்பம் கிராம சுடுகாடு உள்ளது. இந்த வளாகத்தில், மின்மாற்றி தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் உள்ளன.
இந்த மின்மாற்றி மூலமாக, விவசாயிகளின் ஆழ்துளை கிணறு நீர் பாசனத்திற்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த மின்மாற்றி தாங்கி நிற்கும் மின்கம்பங்களை, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், சேதமடைந்துள்ளன. குறிப்பாக, மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்களின் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்ததால், எலும்புக் கூடாக காட்சி அளிக்கிறது.
இதனால், மின்மாற்றியில் தொடர் இணைப்பு என, அழைக்கப்படும் பியூஸ் போனால், அதை மாற்றுவதற்கு மின் கம்பங்களின் மீது ஏற மின்வாரிய ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே, சேதமடைந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்களை புதிதாக மாற்றி தர வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.