மின் விபத்து; அச்சத்தில் ஸ்ரீபெரும்புதுார் மக்கள்

60பார்த்தது
மின் விபத்து; அச்சத்தில் ஸ்ரீபெரும்புதுார் மக்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு, சிவன் கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள், சிறு கடைகள் என, ஏராளமானவை உள்ளன. தவிர, ஸ்ரீபெரும்புதூர் பூதபுரீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நாள்தோறும் இந்த சாலை வழியே சென்று வருகின்றனர். இந்த தெருவில், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கவும், தெருமின் விளக்கு அமைக்கவும், மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த தெருவில் உள்ள மின் கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த, 'பியூஸ் கேரியர்' அறுந்து தொங்கியபடியே உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த தெருவில், கைக்கு எட்டும் உயரத்தில் தொங்கி கொண்டிருக்கும் பியூஸ் கேரியரால், மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. 

தெருவில் விளையாடும் குழந்தைகள், குறிப்பிட்ட அந்த மின் கம்பம் அருகே சென்று விளையாட்டாக, பியூஸ் கேரியரை தொட நேரிட்டால், மின்சாரம் தாக்கும் சூழல் உள்ளது. அதே போல, அப்பகுதியைச் சேர்ந்த பகுதியினர், கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் உட்பட அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் அனைவரும், மின் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், ஆபத்தான நிலையில், தொங்கி கொண்டிருக்கும், 'பியூஸ் கேரியர்' இணைப்பை சீரமைக்க, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி