காஞ்சிபுரம் மாநகராட்சி பெருநகராட்சி ஆக இருந்து தரம் உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி உள்ள நிலையில் திமுக அதிக பெரும்பான்மை பெற்றும் , இரு திமுக உறுப்பினர்களிடையே மேயரை பதவி தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவி வாக்குப்பதிவு நடைபெற்று மகாலட்சுமி யுவராஜ் பதவியேற்றார்.
இதனைத் தொடர்ந்து மாமன்ற கூட்டங்களில் அவ்வப்போது சலசலப்பும் அதிமுக உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளை புறக்கணிப்பதாகவும் கூறி மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளியேறி வந்தனர். ஒரு கட்டத்தில் திமுக உறுப்பினர்களும் மேயருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி தங்கள் பகுதிகளிலும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டி மாமன்ற கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக நாடாளுமன்ற தேர்தல் நன்னடத்தை விதிகள் இருந்ததால் மாமன்ற கூட்டங்கள் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், திமுக மண்டல குழு தலைவர்கள் இரண்டு பேர், திமுக, அதிமுக , பாஜக உள்ளிட்ட 35 மாமன்ற உறுப்பினர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து மாவட்ட ஆட்சியரிடம் தற்போதைய மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மாமன்ற கூட்டத்தை கூட்ட உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்தனர்.