லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட, மார்ச் 16ம் தேதி முதல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
அன்று முதல், தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.
வேட்புமனு பெறுதல், பரிசீலனை போன்றவை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும் பணிகளும் முடிந்ததால், விழிப்புணர்வு பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தனியார் நிறுவனங்களில் தேர்தல் உறுதிமொழி எடுத்தல், கிராம மக்களை திரட்டி பேரணி நடத்துதல், தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் துண்டு பிரசுரம் வழங்குவது, மகளிர் சுயஉதவிக் குழுவினர் வாயிலாக கோலமிடுவது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகள் நடக்கின்றன.
குறிப்பாக கிராமப்புறங்களில் விழிப்புணர்வு பணிகள் வேகமாக நடக்கின்றன. 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர் பார்க்கும் வகையில், கலெக்டர் கலைச்செல்வி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதுபோல, பல்வேறு விழிப்புணர்வு பணிகள், மாவட்டம் முழுதும் தொடர்ந்து நடக்கின்றன. "