19ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணி உயர்வு...!

82பார்த்தது
19ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணி உயர்வு...!
19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் அமுதா, பதவி உயர்வு குறித்து நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக கேடரில் கடந்த 1999ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்து தற்போது ஐஜியாக பணியாற்றி வரும் ஆனந்த் குமார் சோமானி(ஒன்றிய அரசு பணி), ஆர். தமிழ்ச்சந்திரன்(போலீஸ் அகாடமி) ஆகியோர் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழக கேட்டரில் 2004 முதல் 2006ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியில் சேர்ந்து தற்போது டிஐஜிக்களாக பணியாற்றி வரும் ஜெயஸ்ரீ(பெண்களுக்கு எதிரான குற்றம்), பி. சாமுண்டீஸ்வரி(டிஜிபி அலுவலக தலைமையிடம்), எஸ். லட்சுமி(லஞ்ச ஒழிப்புத்துறை), எஸ். ராஜேஸ்வரி(சேலம் டிஐஜி), எஸ். ராஜேந்திரன்(உளவுத்துறை), டாக்டர் எம். எஸ். முத்துசாமி(வேலூர்), என். எம். மயில்வாகனன்(சென்னை போக்குவரத்து இணை கமிஷனர்) ஆகிய 7 பேர் ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2009 மற்றும் 2010 கேடரில் ஐபிஎஸ் அதிகாரிகளாக தற்போது தமிழ்நாடு முழுவதும் எஸ். பி. க்களாக பணியாற்றி வரும் பி. ஆர். வெண்மதி(சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையம்), பி. அரவிந்தன் உள்ளிட்ட10 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணி மூப்பு அடிப்படையில் டிஐஜிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி