விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து ஒருவர் பலி. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழப்பு. இது குறித்து தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் கதை பிரபு என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலையில் ஜுன். 7 நேற்று பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அருப்புக்கோட்டை, குல்லூர்சந்தை, தெற்குத் தெருவைச் சேர்ந்த சங்கிலி (வயது 45) த/பெ. மொக்கைச்சாமி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.